வழிபாடு

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை

Published On 2022-06-09 07:06 GMT   |   Update On 2022-06-09 07:06 GMT
  • ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
  • இதற்கு முன் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் விபூதி, எலுமிச்சம்பழம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில் இதுவாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூக்கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் மற்றொரு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கொங்கூர் பகுதியை சேர்ந்த கே.எம்.சிவராம்(வயது 48) என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யுமாறு கூறியதாக அந்த பக்தர் கோவிலுக்கு வந்து கோவில் நிர்வாகத்திடம் கூறினார்.

அதன்படி நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. நிறைபடியில் கம்பு வைத்து பூஜிக்கப்படுவதால் கம்பு விளைச்சல் அதிகரிக்கும் என்றும், கம்பால் செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்டபொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கோவில் பூசாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந்தேதி முதல் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சம்பழம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

Tags:    

Similar News