வழிபாடு

சபரிமலையில் படிபூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது

Published On 2022-11-17 07:58 GMT   |   Update On 2022-11-17 07:58 GMT
  • படி பூஜைக்கு கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும்.
  • உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிக பொருட்செலவில் நடத்தப்படுவது படி பூஜை ஆகும். இந்த படிபூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். இது குறித்து அவர் சன்னிதானத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர மாத பூஜை நாட்களில் படி பூஜை நடத்தப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும். இந்த பூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பூஜைக்கு 2024-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதே போல் சகஸ்ர கலச பூஜைக்கும் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். நடப்பு சீசனையொட்டி, தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. 250 மில்லி அளவுள்ள ஒரு டின் அரவணை விலை ரூ.80 ஆகும். அப்பம் ஒரு பாக்கெட் ரூ.35 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சபரிமலையில் நேற்று கொட்டும் மழையிலும் பக்தர்கள் தளராமல் சாமி தரிசனம் செய்தனர். மழையில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கூடுதல் வசதிகள் செய்யப்படும். சன்னிதானத்தில் மின்சார தேவையினை பூர்த்தி செய்ய தனியார் உதவியுடன் விரைவில் சோலார் மின் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News