வழிபாடு

பொது ஆவுடையார் கோவில் கார்த்திகை முதல் சோமவார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-11-23 04:55 GMT   |   Update On 2022-11-23 04:55 GMT
  • இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை.
  • ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரத்தில் (வெள்ளாலமரம்) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும். மற்ற நாட்களில் பகலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள்.

ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை சோமவார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து பொது ஆவுடையார் கோவில் செயல் அலுவலர் வடிவேல்துரை கூறுகையில், 'பொது ஆவுடையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவார திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று முன்தினம் கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் வருகிற 28-ந் தேதி, அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி, 12-ந் தேதி ஆகிய 3 நாட்களும் சோமவார திருவிழா நடக்கிறது.

சோமவாரத்தில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் பரக்கலக்கோட்டை கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சோமவாரத்தின் போதும் காணிக்கையாக வருகிற நவதானியங்கள், ஆடு, கோழிகள் மற்றும் பலவகை பொருட்களும் அன்றைய தினமே மாலை 6 மணி அளவில் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படும்' என்றார்.

Tags:    

Similar News