வழிபாடு

சிறிய தேர்பவனி நடந்தபோது எடுத்தபடம்.

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு: திரளானோர் பங்கேற்பு

Published On 2023-01-09 12:23 IST   |   Update On 2023-01-09 12:23:00 IST
  • பூண்டி அன்னையின் சிறிய தேர் பவனி நடைபெற்றது.
  • திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. தஞ்சையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பேராலயம் பிரசித்திப்பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களுள் ஒன்றாகும்.

இந்த பேராலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறவும், உலக நன்மைக்காகவும் ஒவ்வொரு மாதமும் 8-ந் தேதி பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

பூண்டி மாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான முதல் புதுமை இரவு வழிபாடு நேற்று நடந்தது. இந்த வழிபாட்டின் முதல் நிகழ்வாக பெரம்பலூர் மறை மாவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு தொடர்ந்து வர பூண்டி அன்னையின் சிறிய தேர் பவனி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறிய தேர் பவனிக்கு பின்னர் நடைபெற்ற புதுமை இரவு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு, உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து கொண்டனர்.

இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News