வழிபாடு

இன்று மாலை கார்த்திகை தீபத்திருவிழா: பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-12-06 08:36 GMT   |   Update On 2022-12-06 08:36 GMT
  • மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இன்று தங்க ரத புறப்பாடு நடைபெறாது.

முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மலைக்கோவிலில் தினமும் மாலை சண்முகார்ச்சனை, சின்னக்குமார சுவாமி தங்கசப்பரத்தில் யாகசாலை புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாலையில் சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்பட்டது.

பின்னர் பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மலைக்கோவிலில் 4 திசைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைக்கு சின்னக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்களால் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்பட்டது. பின்னர் பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பழனி மலைக்கோவிலைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவில், திரு ஆவினன்குடி கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.விழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று தங்க ரத புறப்பாடு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே ஏராளமாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News