வழிபாடு

காவல் தெய்வமாக காட்சி அளிக்கும் நந்திதேவர்

Published On 2023-02-10 13:52 IST   |   Update On 2023-02-10 13:52:00 IST
  • தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.
  • சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.

பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிர்ந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.

காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவாதர் நிலத்தை உழும்போது தங்கப்பேழை ஒன்றைக் கண்டார். அதில் தங்க விக்ரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவாதர் காதில் சிவபெருமான் ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களைக் கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்டு நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசரீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமான குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவர் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.

இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.

Tags:    

Similar News