வழிபாடு

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் தொடங்கியது

Published On 2022-07-29 06:48 GMT   |   Update On 2022-07-29 06:48 GMT
  • சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் 5-ந்தேதி நடக்கிறது.
  • 9-ந் தேதி விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான செடல் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 7.30 மணி அளவில் கோவிலில் உள்ள கொடி மரத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணியளவில் சாமி வீதிஉலா மற்றும் சிவலிங்க பூஜை நடைபெற்றது. இதில் கடலூர் முதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் தினசரி காலை, மாலை வேளையில் சிறப்பு பூஜைகளும், இரவில் பூத வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

மேலும் 7-ந் தேதி தெப்பல் உற்சவமும், 8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவமும், 9-ந் தேதி விடையாற்றி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News