வழிபாடு

புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-18)

Published On 2024-03-29 03:18 GMT   |   Update On 2024-03-29 03:18 GMT
  • உண்மையான நோன்பு எது?
  • ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது தான் உண்மையான நோன்பு.

உண்மையான நோன்பு எது?

உணவு, பானங்கள், உடல் இச்சை ஆகியவற்றை விட்டு தடுத்துக் கொள்வது தான் உண்மையான நோன்பு என நாம் நினைப்பது முற்றிலும் தவறு. நமது உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் நோன்பு இருப்பதே உண்மையான நோன்பு ஆகும்.

நோன்பின் ஒழுக்கங்கள் எட்டு. அவை: வயிறு, கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, கை-கால்கள், மறைவிடத்தைப் பேணுதல் ஆகும். ஒட்டுமொத்தத்தில் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது தான் உண்மையான நோன்பு.

வயிறு: விலக்கப்பட்டவைகளை உண்ணுவது, பருகுவது ஆகியவைகளை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

கண்கள்: விலக்கப்பட்டவைகளையும், ஆபாசங்களையும் பார்ப்பதை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

காதுகள்: பொய், புறம், அவதூறு, ஆபாசம், கவனத்தை திசை திருப்பும் இசை போன்ற விலக்கப்பட்ட செயல்களை கேட்பதை விட்டு தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

மூக்கு: தடை செய்யப்பட்ட மதுவகைகள், புகைவகைகள், போதையூட்டும் பொருட்கள் ஆகியவைகளை நுகர்வதை விட்டும் தடுத்துநோன்பு இருக்க வேண்டும்.

நாவு: பொய், புறம், அவதூறு, அறிவற்ற பேச்சுக்கள் ஆகியவைகளை விட்டும் தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

கைகள்: அனுமதிக்கப்படாத பொருட்களை தொடுதல், லஞ்சம் வாங்குதல், வரதட்சணை வாங்குதல், வட்டி வாங்குதல், கொடுத்தல், அதற்கு சாட்சியாக இருத்தல், கொலை- கொள்ளையடித்தல் ஆகியவற்றில் இருந்து விலகி இருந்து நோன்பு இருக்க வேண்டும்.

கால்கள்: தடுக்கப்பட்ட இடங்கள் அனைத்திற்கும் செல்வதை விட்டும் தடுத்து நோன்பு இருக்க வேண்டும்.

மறைவிடம்: பாலியல் தொந்தரவு, பலாத்காரம், தகாத உறவு போன்ற செயல்களை விட்டு விலகி நோன்பு இருக்க வேண்டும். இவ்வாறு உடலும், உறுப்புகளும் தவிர்க்க வேண்டியவைகளை விட்டு விலகி இருந்து நோன்பு இருக்க வேண்டும்.

"முஃமீன்களே! உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று, உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமானவர்களாக முடியும்".(திருக்குர் ஆன் 2:183)

"எவர் பொய்யான காரியங்களை செய்வதை யும், பொய்யான பேச்சுக்களையும் விடவில்லையோ, அவர் தமது உணவையும், நீரையும் விட்டுவிடுவ (நோன்புவைப்ப)தில் அல்லாஹ் விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

"எத்தனையோ நோன்பாளிகள், அவர்களின் நோன்பில் இருந்து பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவு (கூலியு)ம் கிடைப்பதில்லை என நபி (ஸல்) கூறினார்கள்". (அறி விப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தாரமீ)

பசித்திருப்பது, தாகித்திருப்பது நோன்பல்ல. தகாதகாரியங்கள் முழுவதையும் தவிர்த்து இருப்பது தான் பரிபூரணமான நோன்பு என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

இந்த நோன்பின் மூலம் இறைவனுக்காக மனிதன் பல தியாகங்களை செய்கிறான். உணவு, நீர், இல்லற இன்பம் இவற்றை மனவிருப்பத்தோடு விலக்குகிறான். இவை அவனது நுகர்தலுக்கு உரியவை. ஆயினும், இவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கி வாழ்கிறான்.

ஐம்புலன்களை தேவையானபோது, அடக்கி ஆளும் ஆற்றலை மனிதன் பெறுவதே நோன்பின் தத்துவம். நாமும் அதை பெறுவோம்.

Tags:    

Similar News