மதுரை கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நாளை நடக்கிறது
- தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
- சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நாளை நடக்கிறது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படுகிறது.
விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் அன்று இரவு நடக்கிறது. அப்போது மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடையும்.
இந்த விழாவை காண உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இதையொட்டி தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சமசுதீன், சையது ரசூல், சம்சூதீன் மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.