வழிபாடு

திருவிளக்கு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

பழனி முருகன் கோவிலில் ஆனி மாத கார்த்திகை உற்சவ விழா

Published On 2023-07-14 03:24 GMT   |   Update On 2023-07-14 03:24 GMT
  • தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
  • தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனி மாதத்துக்கான கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.

தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.

கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை முதலே கேரளா மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகம் பேர் வருகை புரிந்தனர். எனவே கோவில் சார்பில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கூட்டம் காரணமாக தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.

கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி கோவிலில் நேற்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News