வழிபாடு

பல்லக்கு வாகனத்தில் விநாயகரும், நாக வாகனத்தில் சந்திரசேகரரும் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

Published On 2022-12-01 04:13 GMT   |   Update On 2022-12-01 04:13 GMT
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  • 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. 3-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் முருகரும், சிம்ம வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 4-ம் நாளான நேற்று காலை 10.30 மணியளவில் விநாயகர், பல்லக்கு வாகனத்திலும் சந்திரசேகரர், நாக வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னே நாக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி கற்பக விருட்சம், காமதேனு வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மகா தீபத்திற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய், ஆவினில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

மகா தீபத்திற்கு தேவையான நெய்யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் நேரடியாக நெய் விற்பனை தொடங்கப்படும். இதற்காக கோவிலின் ராஜகோபுரத்தின் அருகில் நேரடி நெய் விற்பனைக்கான கவுண்டர் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பக்தர்கள் மகா தீப நெய் காணிக்கைக்கான ரசீது பெற்று நேரடியாக நெய் விற்பனை கவுண்டரில் வழங்கி செலுத்தினர்.

கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர். தீபத் திருவிழா எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெற வேண்டி மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று காலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் உள்ள சாமி பாதத்திற்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வழிபட்டனர்.

Tags:    

Similar News