வழிபாடு

கார்த்திகை தீப திருநாள்: ஸ்ரீரங்கம் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா

Published On 2022-12-03 07:56 GMT   |   Update On 2022-12-03 07:56 GMT
  • அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.
  • சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 8-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி அதனை கண்டருளுவார்.

இதன்படி கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு, கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தக் காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்திற்கும், 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News