வழிபாடு

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலுக்கு 1,501 பெண்கள் பால்குட ஊர்வலம்

Published On 2023-07-16 05:13 GMT   |   Update On 2023-07-16 05:13 GMT
  • மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
  • கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம்.

அதன்படி ஆனி மாத கடைசி வெள்ளியான நேற்று கெங்கையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெற்றன.

தொடர்ந்து 1,501 பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெங்கையம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவில் வளாகத்தில் ஆணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேப்பிலைக்காரி அம்மனாக பக்தர்களுக்கு கெங்கையம்மன் காட்சியளித்தார்

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ். சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News