பானகல் கங்கையம்மன் கோவில் திருவிழா: பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது.
- பக்தர்கள் பொங்கல் வைத்தும், கோழி, ஆடுகளை பலியிட்டும் தரிசனம் செய்தனர்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த பானகல் பகுதியில் கங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது. அதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. பானகல் கங்கையம்மன் கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பானகல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்தும், கோழி, ஆடுகளை பலியிட்டும், மாவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர்.
கங்கையம்மனுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் பூஜை பொருட்கள், பட்டு வஸ்திரங்களை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் எம்.எல்.சி. டாக்டர் சிப்பாய்.சுப்பிரமணியம் ஆகியோர் சமர்ப்பித்தனர்.
முன்னதாக பொன்னாலம்மன் கோவிலில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க பட்டு மற்றும் பூஜை பொருட்களை தலைமீது சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.
நிகழ்ச்சியில் சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.