வழிபாடு

சாமி தரிசனத்துக்காக மலைக்கோவிலுக்கு படி ஏறிச்செல்பவர்களை படத்தில் காணலாம்.

இன்று பழனியில் குவிந்த பக்தர்கள்: நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2023-06-18 13:33 IST   |   Update On 2023-06-18 13:33:00 IST
  • மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
  • முருகப்பெருமானின் 3-ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.

தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும், முருகப்பெருமானின் 3-ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலம் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறை நாளான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தங்கள் குழந்தைகள் இந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். சிலர் தொழில்களில் சிறந்து விளங்கிட சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இன்னும் சிலர் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்துக் கொண்டு முருகனை தரிசித்து சென்றனர். இதனால் மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை முதலே கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதே போல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags:    

Similar News