திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் 21-ந் தேதி நடக்கிறது
- வருகிற 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது.
- காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது. இதனை முன்னிட்டு 21-ந் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 11 மணி வரை அர்ச்சகர்களால் இந்த ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
கோவிலில் உள்ள ஆனந்தநிலையம் முதல் பங்காருவாகிலி வரை கோவிலுக்குள் உள்ள அனைத்து உபகோவில்கள், கோவில் வளாகங்கள், சுவர்கள், மேற்கூரை, பூஜை சாமான்கள் என அனைத்தும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருக்கும். சுத்திகரிப்பு முடிந்ததும், நாமகோபு, ஸ்ரீ சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டா போன்றவற்றுடன் வாசனை திரவியம் கலந்து கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன்பின், சுவாமியின் மூலவிரட்டை மறைத்திருந்த துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் சாஸ்திர முறையில் நடத்துகின்றனர். மதியம் 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.