வழிபாடு

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பாலாலய சிறப்பு யாகம்

Published On 2023-03-25 04:43 GMT   |   Update On 2023-03-25 04:43 GMT
  • 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.
  • இன்று முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.

இந்தநிலையில் மீண்டும் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் திருப்பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாலாலய சிறப்பு யாகம் நடந்தது.

இன்று(சனிக்கிழமை) முதல் கால யாக சாலை பூஜைகளும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சு.சாந்தா, செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News