வழிபாடு
மாரியம்மன்

சிறுமி வடிவில் கனவில் வந்து குடிசை கேட்ட மாரியம்மன்

Published On 2022-05-27 06:57 GMT   |   Update On 2022-05-27 06:57 GMT
தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
பழமையும், புகழும், வரலாற்று சிறப்பும் வணிகச் சிறப்பும், ஆன்மிக பெருமையும் கொண்ட நகரம் கரூர். இத்தகைய சீரும், சிறப்பும் பெற்ற கரூரின் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா. ஏழை, பணக்காரர் பேதமின்றி, சாதி, சமய வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன்.

இக்கோவிலின் வரலாறு சுவாரஸ்யமானதாகும். கோவிலின் பரம்பரை அறங்காவலரின் கனவில் மாரியம்மன் சிறுமி வடிவில் தோன்றி, எனக்கு கரூரில் ஒரு குடிசை இல்லையே என்று ஏக்கத்தை வெளிப்படுத்தினாளாம். ஒன்றும் புரியாத அவர் விளக்கம் கேட்க குழந்தை மாரியம்மன் எதிர்கரையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார் புரியும் என்று சொல்லி மறைந்து விட்டாளாம்.

அப்பெரியவர் அதன்படியே தாந்தோன்றி மலை கிராமத்திற்கு சென்றார். அங்கு ஊரே திருவிழா கோலம் பூண்டு கோலாகலமாக இருந்தது. விஷயம் புரிந்து கொண்ட பெரியவர் உடனே ஆதிமாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து கோவிலை கட்டினார். அது முதல் அவரது குடும்பத்தினர் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து கோவிலை பராமரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள். மாரியம்மன் விழாவின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து மஞ்சள் பூசி வேப்பிலையால் அலங்கரித்து பூஜை ஆராதனையுடன் அமராவதி ஆற்றில் இருந்து கம்பத்தை எடுத்து வருவார்கள்.

ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் கம்பத்தை சுவாமியாக பக்தர்கள் கருதி வணங்குகிறார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில் அன்றாடம் மாலை சாயரட்ச பூஜை நடக்கும். அப்போது கம்பத்துடன் கோவிலின் உள்ளே அம்மனுடன் வைக்கப்பட்டுள்ள சக்தியையும் வைத்து பூஜை செய்வார்கள். கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரை பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள்.
Tags:    

Similar News