வழிபாடு
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள்

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்

Published On 2022-05-26 09:34 GMT   |   Update On 2022-05-26 09:34 GMT
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள்கோவிலில் இன்று மாலை ஹிம்ஹ வாகனம், நாளை காலை ஹம்ச வாகனம், மாலை சூரிய பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றதுடன் தொடங்கியது.

இதையொட்டி கோவில் கொடி மரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவப்பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் சப்பரத்தில் உற்சவப்பெருமாள் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை ஹிம்ஹ வாகனம், நாளை காலை ஹம்ச வாகனம், மாலை சூரிய பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. நாளை மறுதினம் பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவமான கருடசேவை உற்சவம் நடக்கிறது. அன்று மாலை அனுமந்த வாகன வீதி உலா நடைபெறுகிறது.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News