வழிபாடு
சூலக்கல் மாரியம்மன் கோவில் 36 அடி உயர தேரை அலங்கரிக்கும் பணி தீவிரம்

சூலக்கல் மாரியம்மன் கோவில் 36 அடி உயர தேரை அலங்கரிக்கும் பணி தீவிரம்

Published On 2022-05-24 09:42 GMT   |   Update On 2022-05-24 09:42 GMT
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 36 அடி உயர தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 28-ந் தேதி வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா, கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் வீதி உலா மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இரவில் மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

இதையடுத்து நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26, 27, 28-ந் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26-ந் தேதி தேரோட்டம் என்பதால், கோவில் முன்பு தகர செட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட 36 அடி உயர தேர் வெளியே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து வர்ணம் பூசும் பணி உள்பட தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 அடி உயரம் கொண்ட விநாயகர் தேரையும் அலங்கரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News