வழிபாடு
தசாவதார கோலங்களில் அழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

தசாவதார கோலங்களில் எழுந்தருளிய கள்ளழகர்: நாளை அழகர் மலைக்கு புறப்படுகிறார்

Published On 2022-04-18 12:27 IST   |   Update On 2022-04-18 12:27:00 IST
இன்று பிற்பகல் கள்ளழகர் திருமஞ்சனமான பின்பு அனந்தராயர் பல்லக்கில் மதுரை தல்லா குளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வருகிறார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா எளிமையாக கோவில் வளாகத்திலேயே நடந்தது. இதனால் மதுரை நகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் சித்திரை திருவிழாவை வழக்கம்போல் விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 5ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வீதி உலா, பட்டாபிஷேகம், திக் விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் என அடுத்தடுத்து நடந்த விழாக்களால் மதுரை நகரமே குலுங்கியது.

சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 16-ந்தேதி நடந்தது. அதிகாலை 6.12 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்வுக்குப் பின் புராணங்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி நேற்று வண்டியூரில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் காட்சி தந்து சாபவிமோசனம் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நேற்றிரவு அழகர் வண்டியூரில் இருந்து புறப்பட்டு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். வழி நெடுக பக்தர்கள் விளக்கேற்றி அவரை வழிபட்டனர். நள்ளிரவு ஒரு மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் தொடங்கின.

கள்ளழகர் வேடத்திலிருந்த அழகர் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். விடிய விடிய நடந்த தசாவதார நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

இன்று பிற்பகல் கள்ளழகர் திருமஞ்சனமான பின்பு அனந்தராயர் பல்லக்கில் மதுரை தல்லா குளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு வருகிறார். நாளை(19-ந் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி கருப்பணசுவாமி கோவில் சன்னதிக்கு வருகிறார். அங்கு வையாளியானவுடன் அழகர் மலை நோக்கி புறப்படுகிறார். வழியில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மூன்று மாவடி மறவர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

20-ந் தேதி அதிகாலை அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக பகல் 12 மணிக்கு அழகர் மலை சென்றடைகிறார். 21-ந்தேதி கள்ளழகர் கோவிலில் நடக்கும் உற்சவ சாந்தியுடன் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Similar News