வழிபாடு
கபாலீஸ்வரர் கோவில் மூடிப்பட்டுள்ளதால் வெளியே நின்று தரிசனம் செய்த பக்தர்

கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

Published On 2022-01-07 04:34 GMT   |   Update On 2022-01-07 09:09 GMT
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மார்கழி மாதம் மற்றும் தைப்பூசம் வருவதை முன்னிட்டு முருகன் கோவில்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் வருவார்கள். அதேபோல் பாத யாத்திரையாகவும் தினமும் திரளான பக்தர்கள் வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது.

இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் நேற்று பக்தர்கள் பெருமளவு குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டது.

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரையை ஊரடங்குக்கு முன்னதாக அதாவது இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளவும், அதற்கு ஏற்றபடி பக்தர்கள் தங்களுடைய பாதயாத்திரையை திட்டமிட்டு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு தடை உத்தரவை முன்னிட்டு மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மூடிப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோவில் வாசலில் நின்று வழிபாடு செய்தனர். அதே போல் சாந்தோம் ஆலயமும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News