வழிபாடு
சதுரகிரி கோவிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் சென்ற போது எடுத்த படம்.

சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-12-17 04:27 GMT   |   Update On 2021-12-17 04:27 GMT
மார்கழி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு வனத்துறை கேட் அடைக்கப்பட்டது.

மார்கழி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுந்தரமகாலிங்கம் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பக்தர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு செல்ல அவதி அடைந்தனர். வருகிற 19-ந் தேதி வரை பக்தர்கள் சதுரிகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News