வழிபாடு
பவானி கூடுதுறையில் புனித நீராடிய பொதுமக்கள்.

பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய திரண்ட பொதுமக்கள்: இன்று முதல் புனித நீராட அனுமதி

Published On 2021-12-04 07:13 GMT   |   Update On 2021-12-04 07:13 GMT
ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. கூடுதுறைக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு சென்று வருகிறார்கள்.

மேலும் கூடுதுறைக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் ஆடிப்பெருக்கு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள்.

இந்த நிலையில் கொரேனா பரவல் காரணமாக பவானி கூடுதுறையில் பக்தர்கள் நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையொட்டி 1½ ஆண்டுகளுக்கு பிறகு கட்டுபாடுகளுடன் பவானி கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்ய கடந்த 1-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் புனித நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மக்கள் குறைந்த அளவே வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் இன்று அமாவாசையொட்டி கூடுதுறைக்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். கார்த்திகை அமாவாசை என்பதால் இன்று அதிகாலை முதலே கூடுதுறைக்கு பொதுமக்கள் பலர் வந்து குவிந்தனர்.

அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பரிகாரம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபாடு செய்தனர். இன்று முதல் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கூடுதுறையில் புனித நீராடினர்.

இதையொட்டி ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். சமூக இடைவெளியை கடை பிடித்து சென்றனர். ஒருவர் பரிகாரம் செய்ய 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உடன் வந்த மற்றவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுதி வருகிறார்கள்.
Tags:    

Similar News