வழிபாடு
பத்மாவதி தாயார் பெரிய சேஷ வாகனத்திலும், ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி

பெரிய சேஷ, ஹம்ச வாகனங்களில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்

Published On 2021-12-02 08:36 GMT   |   Update On 2021-12-02 08:36 GMT
திருச்சானூர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளில் உற்சவர் பத்மாவதி தாயார், பெரிய சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை வாகன மண்டபத்தில் ஏழு தலைகளை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், ‘வைகுண்டநாதர்’ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மய்யா, கோவில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார், வீைண ஏந்திய சரஸ்வதி அலங்காரத்தில் (வீணாவேணி) ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு வாகன மண்டபத்தில் அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை முத்துப்பந்தல் வாகன சேவை, இரவு சிம்ம வாகன சேவை நடக்கிறது.
Tags:    

Similar News