ஆன்மிகம்
காணிக்கையாக கிடைத்த 5 கிலோ தங்கத்தில் தகடுகள் பதித்து கொடிமரம் கும்பாபிஷேகம்

வைத்தீஸ்வரன் கோவிலில் 5 கிலோ தங்கத்தில் தகடுகள் பதித்து கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம்

Published On 2021-09-08 13:35 IST   |   Update On 2021-09-08 13:35:00 IST
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

இந்நிலையில் இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கியது.

கோவிலுக்கு 5 கிலோ தங்க கட்டிகள் காணிக்கையாக வரப்பெற்றதையடுத்து இதனை தகடுகளாக மாற்றும் வகையிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.

முன்னதாக 2 கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் கட்டளைத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், சீர்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Similar News