ஆன்மிகம்
உமாபதி சிவாச்சாரியார்

சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை பரப்பியவர்களுள் முக்கியமான உமாபதி சிவாச்சாரியார்

Published On 2021-07-02 12:37 IST   |   Update On 2021-07-02 12:37:00 IST
திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் இவர் சிறப்புக்குரியவா். நாயன்மார்களுக்குப் பின், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை பரப்பியவர்களுள் முக்கியமானவர். இவர் சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர் மரபில் தோன்றியவர். மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர். சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.

மேலும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தை சுருக்கி, ‘திருத்தொண்டர் புராண சாரம்’ என்ற பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றை ‘சேக்கிழார் புராணம்’ என்ற பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோவிலின் வரலாற்றை ‘கோயிற் புராணம்’ என்னும் பெயரில் 100 பாடல்களாக பாடினார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை போன்ற பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவைதான்.

சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்டவர்களில் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார். அவர், தீட்சிதர் அல்லாதவரை குருவாக ஏற்றதால், அவருக்கு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. அவரை தங்கள் சமுதாயத்தில் இருந்தும் நீக்கிவைத்தனர். இதனால் உமாபதி சிவம், சிதம்பரத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்ந்தார்.

இந்த நிலையில் சிதம்பரம் கோவிலில் கொடியேற்றுவதற்கென உமாபதி சிவத்திற்குரிய முறை வந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள், வேறு ஒருவரிடம் கொடியேற்றும் பொறுப்பை அளித்தனர். ஆனால் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லை. பலர் முயற்சித்தும் பலனில்லை. சிவபெருமானின் திருவருளை உணர்ந்த தீட்சிதர்கள், உமாபதி சிவத்தை அழைத்து கொடியேற்றச் சொன்னார்கள். அவர் நான்கு பதிகங்களைக் பாடி கொடியை ஏற்றிவைத்தார். இந்த பாடல்களே ‘கொடிக்கவி’ என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.

Similar News