ஆன்மிகம்
அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்

அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்

Published On 2021-05-29 11:40 IST   |   Update On 2021-05-29 11:40:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி புனிதநீர் அடங்கிய 108 கலசங்கள் வைத்து 4 கால யாக பூஜை தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி புனிதநீர் அடங்கிய 108 கலசங்கள் வைத்து கடந்த 26-ந் தேதி மாலையில் இருந்து 4 கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்று பகலிலும் கோவிலில் கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது.

ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை கூறினர். தற்போது கொரோனா ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.

Similar News