ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகம்

வைகாசி விசாக விழா ரத்து: 2 ஆண்டுகளாக நேர்த்திக்கடனை செலுத்த முடியாத பக்தர்கள்

Published On 2021-05-26 10:28 IST   |   Update On 2021-05-26 10:28:00 IST
வைகாசி விசாக விழா ரத்து செய்யப்பட்டதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகம் வெறிச்சோடியது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நேர்த்திக்கடன் செலுத்த முடியாத நிலையை கொரோனா தொற்று உருவாக்கி விட்டதாக பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வைகாசி வசந்த உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் 9-வது நாளான விசாகத்தன்று ஆண்டிற்கு ஒருமுறை சண்முகர் சன்னதியை விட்டு கம்பத்தடி மண்டபத்தையொட்டி உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகப்பெருமான் எழுந்தருளுவதும், அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை இடைவிடாது சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறுவதும் தனிச்சிறப்பு.

மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி என்று விதவிதமான காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதனால் மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் விழாக்கோலம் பூண்டிருக்கும். திரும்பிய திசை எல்லாம் பக்தர்களின் தலையும், அரோகரா கோஷமும் எதிரொலிக்கும்.

ஆனால் கடந்த ஆண்டில்(2020) கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கால் விசாக விழா விசேஷமாக நடைபெறவில்லை. அதே சமயம் பக்தர்கள் இன்றி சண்முகர் சன்னிதியிலேயே சில மணிநேரம் சண்முகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா வழக்கம் போல கோலாகலமாக நடைபெறும். அதில் நேர்த்திக்கடனை செலுத்தலாம் என்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதற்கிடையில் கொரோனா 2-வது அலை பரவலால் கோவில் மூடப்பட்டது. இதனையடுத்து வைகாசி விசாக திருவிழா ரத்து என்று கோவில் நிர்வாகம் அறிவித்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டில் சண்முகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது போல விசாக திருவிழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஆனால் பக்தர்கள் எதிர்பார்த்தபடி வைகாசி வசந்த உற்சவ விழா நடைபெறவில்லை.

இதேசமயம் சண்முகர் சன்னதியில் ஆகமவிதிப்படி சண்முகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் மற்றும் உற்சவர் சன்னதி, கருவறையில் வழக்கமான பூஜைகள் நடந்தது. வைகாசி விசாக திருவிழா ரத்து என்பதால் பக்தர்கள் வரவில்லை ஆகவே கோவில் வளாகம், சன்னதி தெரு வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பக்தர்கள் பால்குடம் கொண்டுவந்து கோவில் வாசல் கதவில் உள்ள வேலுக்கு பாலாபிஷேகம் செய்ய முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் அவர்களை தடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர். காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்த முடியவில்லை என்று கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

Similar News