ஆன்மிகம்
கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்): பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் அருள்பாலித்த காட்சி.

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-04-09 09:12 GMT   |   Update On 2021-04-09 09:12 GMT
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஆனால் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

நிகழாண்டு இக்கோயிலில் சித்திரைப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் கொடிமரத்தில் விழழ கொடி ஏற்றப்பட்டது.

இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று, நாளை முதல் கோவில் விழாக்களுக்கு அரசுத் தடை விதித்துள்ளது. என்றாலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, கோவில் வளாகத்துக்குள் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆனால் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு 2015-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரும் திருவிழாவாக இருந்து வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News