ஆன்மிகம்
நெல் மீது 1008 சங்குகளால் ஆன நடராஜரை படத்தில் காணலாம்.

தழுவிய மகாதேவர் கோவிலில் 1,008 சங்குகளால் ஆன நடராஜர்

Published On 2021-03-12 03:51 GMT   |   Update On 2021-03-12 03:51 GMT
சிவராத்திரியையொட்டி நாகர்கோவில் வடசேரி தழுவிய மகாதேவர் கோவிலில் 1008 சங்குகளால் நடராஜர் உருவம் வடிவமைக்கப்பட்டது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சிவராத்திரி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் இரவு முழுவதும் 4 கால பூஜை நடந்தது. மேலும், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஆவுடையம்பாள் உடனாகிய அருள்பொழி தழுவிய மகாதேவர் கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், ஒழுகினசேரி சோழராஜா கோவில், இருளப்பபுரம் பசுபதீ‌‌சுவரர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், சுங்கான்கடை சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் விடிய விடிய பூஜை வழிபாடுகள் நடந்தன. மேலும் சிவாலய ஓட்டம் நடைபெற்ற 12 சிவன் கோவில்களிலும் 4 கால பூஜை நடந்தது.

நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஆவுடையம்பாள் உடனாகிய அருள்பொழி தழுவிய மகாதேவர் கோவிலில் சிவராத்திரியையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு சாமி, அம்பாளுக்கு அபிஷேகம், 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. மேலும் ஒவ்வொரு கால பூஜையிலும் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

முன்னதாக கோவிலில் 1008 சங்குகளை கொண்டு நடராஜர் உருவம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நெல்லை தரையில் பரப்பி அதன் மீது நடராஜர் வடிவில் ஒவ்வொரு சங்குகளாக வைக்கப்பட்டன. சங்குகளால் வடிவடைக்கப்பட்ட நடராஜருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News