ஆன்மிகம்
விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.

விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம்

Published On 2019-08-05 11:46 IST   |   Update On 2019-08-05 11:46:00 IST
விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் விருத்தாம்பிகை அம்மன் சன்னதி அமைந்துள்ளது. அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடிப்பூர திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இரவில் அன்ன வாகனம், குதிரை, யானை, வெள்ளி ரி‌‌ஷப வாகனங்கள் என்று வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் ஆகியன கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நூற்றுகால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் மற்றும் வருவாய்துறை, இந்து சமய அறநிலை துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News