ஆன்மிகம்

அம்பாள் அவதரித்த நாள்

Published On 2019-02-21 10:18 GMT   |   Update On 2019-02-21 10:18 GMT
அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும். அன்னை அவதரித்த திருக்கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடன், பார்வதி தேவி இருந்தாள். அப்போது பார்வதி ஈசனிடம், “சுவாமி! உங்களுடைய உண்மை நிலையை எனக்கு உரைக்க வேண்டும்” என்றாள்.

அதற்கு இறைவன், “உயிர்கள் நலம் பெற ஐந்தொழில் செய்வேன். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன். எனக்கென ஒரு உருவமும் இல்லை. அருளே எனது உருவமாகும்” என்றார்.

அதற்கு பார்வதி, “அருள் தான் உங்களுடைய உருவம் என்றால், அந்த அருள் நான்தானே” என்று சற்று கர்வத்தோடு கேட்டாள்.

அப்போது இறைவனின் கண்ணசைவில் உலகத்தின் அசைவுகள் அனைத்தும் நின்றுபோனது. இதனால் பதறிப்போன பார்வதி, “இறைவா! உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்களுக்கு சில நொடி என்பது, உயிர்கள் பல யுகங்கள் ஆகும். எனவே இந்த அசைவற்ற நிலையை மாற்றுங்கள்” என்று வேண்டினாள். இதையடுத்து இறைவன் உலகை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

தான் செய்த பாவத்திற்காக பூமியில் பிறந்து சிவபூஜை செய்ய பார்வதி எண்ணினாள். அந்த நேரத்தில் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அம்பிகை காளிந்தி நதியில், ஒரு தாமரைப் பூவில் வலம்புரி சங்கு வடிவமாக தோன்றினாள். மாசி மகத்தில் தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது. அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும்.
Tags:    

Similar News