ஆன்மிகம்

ஆவணி மூலத்திருவிழா: உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல்

Published On 2018-08-20 04:53 GMT   |   Update On 2018-08-20 04:53 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. விழாவின் 5-ம் நாளான நேற்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

‘உலவாக்கோட்டை அருளிய லீலை’ புராணம் வருமாறு:-

மதுரையில் அடியார்க்கு நல்லார் என்ற அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகு தான் உணவு உண்பது என்ற கொள்கை உடையவராக இருந்தார். இதனால் அவரது செல்வம் வற்றிய போதும் கடன் பெற்றாவது தனது கடமையை நிறைவேற்றி வந்தார்.



ஒரு கட்டத்தில் கடனும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எனவே அவர் தனது மனைவியுடன் இறைவன் சோமசுந்தரரை தரிசனம் செய்த பின்பு உயிர் நீப்பது என நினைத்து கோவிலுக்கு சென்றார்.

அவரது தருமநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாகத் தோன்றி வீட்டிற்கு செல். அங்கே உனக்காக அள்ள அள்ளக் குறையாத நெல்மணிகளைக் கொண்ட உலவாக் கோட்டை ஒன்றை அளித்துள்ளோம் என்று கூறினார். இறைவன் தெரிவித்த படியே இருவரும் வீட்டிற்கு சென்றனர். அங்கு இறைவன் வழங்கிய உலவாக் கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளைக் கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்களுக்கு உணவளித்து வாழ்ந்தார். இவ்வாறு புராணம் கூறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று இரவில் சாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாழி வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
Tags:    

Similar News