ஆன்மிகம்
கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல்

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா: கருங்குருவிக்கு உபதேசம்

Published On 2018-08-16 08:18 GMT   |   Update On 2018-08-16 08:18 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று முதல் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. முதல் நாளான நேற்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் லீலை பின்வருமாறு:-

ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்த நிலையில் சிறிதளவு பாவம் செய்திருந்ததால் மறுபிறவியில் கருங்குருவியாக பிறக்கிறான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தது. அந்த சமயத்தில் அந்த மரத்தின் கீழே சிலர் மதுரையைப்பற்றியும், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசி கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி அங்கிருந்து பறந்து மதுரைக்கு வந்தது. அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது.

இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அப்போது கருங்குருவி இறைவனிடம் எங்கள் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கும்படி கேட்டது. மேலும் கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முத்திபேறு அடைந்தது என்பது வரலாறு. விழாவில் நேற்று இரவு சாமி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 
Tags:    

Similar News