ஆன்மிகம்
பாண்டுரங்கன், ருக்மாயி அம்மன் சன்னிதியில் சிறுமிகள் கோவில் கருவறைக்குள் சென்று வழிபட்டதை படத்தில் காணலாம்.

ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு பாண்டுரங்கன் கோவில் கருவறைக்குள் பக்தர்கள் சென்று வழிபட ஏற்பாடு

Published On 2017-07-05 04:43 GMT   |   Update On 2017-07-05 04:43 GMT
ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூரில் பாண்டுரங்கன் கோவில் கருவறைக்குள் பக்தர்கள் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் ராயபுரத்தில் பிரசித்தி பெற்ற ராஜவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாண்டுரங்கன், ருக்மாயி அம்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் கோவில் கருவறைக்குள் சென்று பாண்டுரங்கன், ருக்மாயி அம்மன் பாதம் தொட்டு வணங்கி வழிபட அனுமதிப்பது வழக்கம்.

அந்த வகையில் 14-ம் ஆண்டு ஆஷாட ஏகாதசி விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பாண்டுரங்கன், ருக்மாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 7 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 8 மணி முதல் பக்தர்கள் கருவறைக்குள் சென்று சாமி பாதம் தொட்டு வணங்கி வழிபட அனுமதிக்கப்பட்டனர்.



ஆண், பெண் பக்தர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவில் கருவறைக்குள் சென்று சாமிகளின் பாதம் தொட்டு வணங்கினார்கள். கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தலின் பேரில் ஆண் பக்தர்கள் கோவில் கருவறைக்குள் மேல்சட்டை அணியாமல் சென்று வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பால் மற்றும் இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி, பஜனை மற்றும் கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இரவு 9 மணி வரை கோவில் கருவறைக்குள் சென்று வணங்க அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News