ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வெளிக்கோடை உற்சவம் தொடங்கியது

Published On 2017-05-18 06:15 GMT   |   Update On 2017-05-18 06:15 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் வெளிக்கோடை உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் தாயார் கோடை உற்சவம் வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான வெளிக்கோடை உற்சவம் நேற்று மாலை தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

முதல் நாளான நேற்று மாலை உற்சவர் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோடை நாலுக்கால் மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் 8 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வெளிக்கோடை உற்சவத்தை முன்னிட்டு 21-ந் தேதி வரை மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. ரெங்கநாச்சியார் உள்கோடை உற்சவம் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News