ஆன்மிகம்
கட்டண வரிசையில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2017-02-27 09:06 IST   |   Update On 2017-02-27 09:06:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. அண்ணாமலையாரை காண வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கமான நாட்களை விட அதிகமாக காணப்படும்.

மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும். சித்திரை பவுர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து 14 கிலோ மீட்டர் நடந்து மலையை கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

மகாசிவராத்திரி விழா கடந்த 24-ந் தேதி கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.



இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடந்த 6-ந் தேதி நடந்த கும்பாபிஷேகத்தின் போதும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு பின்னர் சாமி தரிசனம் செய்யாத பொதுமக்கள் மற்றும் கடந்த சிவராத்திரி அன்று சாமி தரிசனம் செய்யாத பக்தர்கள் பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருகை தந்திருந்தனர். இதன் காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. காலை முதலே பொது தரிசனம், கட்டண தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காலை 10 மணி தொடங்கி மதியம் 12-30 மணிவரை சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் கட்டண தரிசனம் வழியாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து வரிசையாக சென்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை தரிசனம் செய்தனர். அதேபோல் பொதுவழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Similar News