ஆன்மிகம்

மார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 15

Published On 2017-12-30 02:37 GMT   |   Update On 2017-12-30 02:37 GMT
மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
'எல்லே இளங்கிளியே; இன்னம் உறக்குதியோ?'
'சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்'
'வல்லை உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!'
'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'
'ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை?'
'எல்லாரும் போந்தாரோ?' போந்தார், போந்தெண்ணிக்கொள்;
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய். 
 
பொருள்: ''ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! ''நாங்கள் அழைத்தும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ''இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள். 

தோழிகள், ''உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது.'' என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ''சரி..சரி... நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்,'' என்கிறாள்.

''அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?'' என்று கடிந்து கொள்கிறார்கள்.

அவளும் ''என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்து விட்டார்களா?'' என்கிறாள். தோழிகள், ''நீயே வெளியே வந்து எண்ணிப்பார். குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்க வருவாய்,'' என்கிறார்கள்.
Tags:    

Similar News