கோவில்கள்

தோரணமலையின் தோற்றம், அகத்தியர், தேரையர் வழிபட்ட தோரணமலை முருகன்


அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன்

Published On 2023-01-31 04:02 GMT   |   Update On 2023-01-31 04:02 GMT
  • இந்த ஆலயத்தில் 5-ந்தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.
  • கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் பொதிகை மலையின் ஒரு பகுதியாக இருக்கிறது, தோரணமலை. தேனினும் இனிய தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் கண்டு வியந்தமலை இது. யானை படுத்து இருப்பதுபோல் காட்சி தருவதன் காரணமாக, இந்த மலை முதலில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி தற்போது 'தோரணமலை' என்று வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலையின் உச்சியில் உள்ள குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். சிவன்-பார்வதி திருமணம் கயிலாய மலையில் நடந்தபோது, அந்த திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று அனைவரும் கயிலாய மலையில் குவிந்தனர். இதனால் வட பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகம் சமநிலையை அடைவதற்காக அகத்தியரை, தென் பகுதிக்கு அனுப்பினார் சிவபெருமான்.

அப்படி அகத்தியர் வந்தபோது, அவரைக் கவர்ந்த இடம் இந்த தோரணமலை. இங்கு அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான், ஒருவன் முழு மருத்துவனாக முடியும்' என்று கருதிய அகத்தியர், அதற்காக ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்களை வகுத்துள்ளார்.

அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின்படி பாடத்திட்டங்களை வகுத்தார். பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது. தொடர்ந்து கணிதம், மருத்துவ ஆய்வு வகைகள், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாகடம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், ரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், ரணவாகடம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்த பின்னர், தோரணமலை பகுதியில் அகத்தியர் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சிக் கூடத்தில் பயில சித்தர்கள் பலர் வந்தனர். அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன.

இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி (பழனி), கொல்லிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும். இந்த பாடசாலையில் 6 ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன.

அகத்தியரும், அவரது சீடர் தேரையரும் தோரணமலையில் இருந்த போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர்.

அவர்கள் இருவரும் வழிபட்ட முருகப்பெருமான்தான், இன்றும் தோரணமலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தோரணமலை முருகன் கோவில், ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது. 1970-ம் ஆண்டு ஆதிநாராயணன் என்பவர் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்ற பின்னர், தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. பக்தர்களின் வருகைக்குப் பிறகு, இந்த ஆலயத்தில் தினமும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையேறிச் செல்வதற்கான பாதைகள், படிகள் நல்ல முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே மலை வழியில் பக்தர்கள் அமர்ந்து செல்ல, அகத்தியர், தேரையர், அருணகிரிநாதர் ஆகியோர் பெயர்களில் மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், முருகப்பெருமான்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

அகத்தியர், தேரையர், சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முருகன் அருகில் பத்திரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். முருகன் சன்னிதி அருகே ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். தோரணமலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், குரு பகவான், பாலமுருகன், நவக்கிரகங்கள், சப்த கன்னியர்கள், கன்னிமாரியம்மன் சன்னிதிகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.

-புலவனூரான்

Tags:    

Similar News