கோவில்கள்

வேண்டுதல்களை நிறைவேற்றும் சுகவனேஸ்வரர் திருக்கோவில்- சேலம்

Published On 2023-01-06 07:26 GMT   |   Update On 2023-01-06 07:26 GMT
  • நவகிரகங்களில் இராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர்.
  • மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும்.

மூலவர் – சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார்

அம்மன் – சுவர்ணாம்பிகை, மரகத வல்லி, பச்சை வல்லி

தல விருட்சம் – பாதிரி மரம்

தீர்த்தம் – அமண்டுகம்

பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்

அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.

பிரம்மதேவன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறது என்ற இரகசியத்தை சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களில், சிவநெறிகளில் சிறந்த சுகர் என்ற முனிவர் சரஸ்வதியிடம் போய் சொல்லிவிட்டார். கோபம் கொண்ட பிரம்மன், சுகர் முனிவரைக் கிளியாக்கி சாபம் கொடுத்துவிட்டு, பாபநாசப்பகுதியில்(இப்போதைய கோயில் பகுதி) வந்த சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட்டுவந்தால் சாபம் நீங்கும் என்றும் கூறினார்.

அதேபோல் வந்து எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளியாக சுகர் முனிவர், சிவபெருமானை வழிபட்டு வரும் வேளையில் வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க, அவை புற்றின் மீது பதுங்கின. கோபம்கொண்ட வேடன் புற்றை வெட்டினான். கிளிகள் எல்லாம் செத்தன. அப்போது இராசகிளி(சுகர்) மட்டும் சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து, காத்தது. வேடன் கிளியைவெட்ட இரத்தம் பீறிட்டது. கிளி இறக்க சுயம்புவின் தலையில் இரத்தம் பீறிட்டது.

சுயம்புவாகிய இறைவனை உணர்ந்த வேடன் தன் வாளால் தன்னைத்தானே வெட்டி மாய்த்துக்கொண்டான். சிவனடி சேர்ந்ததால் கிளியுருவம் மறையப்பெற்ற சுகர் முனிவர், "பெருமானே, நீங்கள் சுகவனேஸ்வரராக இத்திருத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருள் தர வேண்டும்" என்று கேட்டுக் கொள்ள, அதன்படியே இறைவனும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

நவகிரகங்களில் இராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதனால் நல்ல வரனும், உத்தியோகமும் கை கூடும்.

நவகிரக சக்தி மேல் தளத்தில் பல்லி, உடும்பு உருவங்கள் உள்ளன. இங்கு வழிபட, பல்லி விழும் உபாதைகள் நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம். மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது.

திருவிழா:

வைகாசிப் பெருந்திருவிழா -10 நாட்கள்– கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரைத்திருவிழா ஆகியவையும் சிறப்பாக நடைபெறும்

கோரிக்கைகள்:

இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு (சகட விநாயகர்)மாலை, தேங்காய், பழம், கடலை சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்ட்ட உபாதைகள் நீங்கும்.

கல்யாணபாக்கியம், குழந்தைபாக்கியம், உத்தியோக பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபடலாம். பல்லி விழும் உபாதைகள் விலக இத்தலத்தில் வழிபடுதல் நல்லது. தேவர்கள் பெருமானை அரசமர வடிவில் வழிபட்டது; சேரமானுக்கும், ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் தந்தது; ஒளவையார் ஓர் வளர்ப்புப்பெண்ணுக்குத் திருமணம் செய்வித்தது போன்ற பெருமைகளையுடைய தலம்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் வேஷ்டி சேலை வாங்கி படைப்பது, மஞ்சள் காப்பு, சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம் செய்யலாம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

Tags:    

Similar News