கோவில்கள்

தென்னிந்தியாவின் ஷீரடியாக திகழும் கோவை ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவில்

Published On 2023-02-01 05:35 GMT   |   Update On 2023-02-01 05:35 GMT
  • நாளை இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனி நடக்கிறது.
  • 83 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது.

எனது பக்தர்கள் அனைவரும் என் குழந்தைகள், நான் உங்கள் தந்தை, நீங்கள் வணங்கும் தெய்வம் எதுவோ அதையே எப்போதும் வணங்குங்கள். விரைவில் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார். இது பல லட்சம் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கும் ஷீரடி சாயிபாபாவின் ஆசீர்வாத வார்த்தைகள்.

ஷீரடி சாயிபாபா

மனித குலம் பல யுகங்களை கடந்து, கடைசியாக கலியுகத்தில் வந்து நிற்கிறது. இந்த கலியுகம் நலமாக வாழ நாமசங்கீர்த்தனமே சிறந்தது என்று யோகிகளும், முனிவர்களும் கூறினர். அந்த வரிசையில் மனிதராய் அவதரித்து, அன்பால் அனைத்து உயிர்களையும் தன் பால் ஈர்த்து, கலியுகத்தின் கருணை கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் ஷீரடி சாயிபாபா.

கல்லை கரைத்தது, உப்பு தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது, விஷத்தை நீக்கியது என்று சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

முழு உருவ சிலை

அவ்வளவு மகிமை பொருந்திய ஷீரடி சாயிபாபாவுக்கு, தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் 83 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள ஷீரடி சாயிபாபா கோவிலுக்கு ஸ்ரீ நாகசாயி மந்திர் என்று பெயர் சூட்டப்பட்டது. இக்கோவிலுக்குள் நுழைந்ததுமே நமது மனதில் உள்ள இறுக்கம் விலகி சென்று விடுகிறது. அதன் உச்சமாக முழு உருவ பளிங்கு சிலையில் காட்சி தரும் பாபாவை கண்டவுடன், நம் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைப்பதையும் உணர முடிகிறது.

முதல் கும்பாபிஷேகம்

கோவையில் கடந்த 1943-ம் ஆண்டு ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயிபாபா கோவில்) உள்ளது. உலகோர் அனைவரும் பாபாவை அறிய வேண்டும். அவரது அருளை பெற வேண்டும் என்பதை குறிக்கோளுடன், பூஜ்ய ஸ்ரீ பி.வி.நரசிம்ம சுவாமிஜி மற்றும் சி.வரதராஜா அய்யா இணைந்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாயிபக்தி இயக்க அமைப்பையும், சாயிபாபா மிஷனையும் 1939-ம் ஆண்டு தொடங்கினர். தென்னிந்தியாவின் முதல் ஷீரடி சாயிபாபா கோவில், ஸ்ரீ நாகசாயி மந்திர் ஆகும். இக்கோவிலில் முதல் கும்பாபிஷேகம் 10-10-1946 அன்று நடைபெற்றது.

தங்கரத பவனி

ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலின் கோபுரம் ஷீரடி சாயிபாபா சமாதி அடைந்த பின்பு, அவருக்காக முதன் முதலாக கட்டப்பட்ட கோபுரம் ஆகும். ஸ்ரீ நாகசாயி மூலவர் சிலையானது உலகிலேயே 2-வது பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டது. 1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி வியாழக்கிழமை சாயிபாபா படத்திற்கு முன் 3 அடி முதல் 4 அடி நீளம் உள்ள நாகரூபத்தில் சாயிபாபா 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து காட்சி அளித்தார்.

ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. கடந்த 28-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீ நாகசாயி உற்சவ மூர்த்தி வீதி உலாவும், நாளை (வியாழக்கிழமை) இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் என்.சர்வோத்தமன், அறங்காவலர்கள் ஜி.தியாகராஜன், எஸ்.சந்திரசேகர், ஜி.சுகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

வரலாற்று சின்னம்

இதுகுறித்து ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறும்போது, அறக்கட்டளையின் கீழ் சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி), சாயிதீப் திருமண மண்டபம், இலவச ஹோமியோபதி கிளினிக் மற்றும் மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று வரை கட்டணமில்லா தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவில் கோவை மாநகரத்தின் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் தரிசனத்திற்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர் என்றார்.

Tags:    

Similar News