கோவில்கள்

பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில்

Published On 2023-06-12 06:33 GMT   |   Update On 2023-06-12 06:33 GMT
  • இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
  • இத்தலம் வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது.

நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர் பெருமானாலும், திருஞானசம்பந்த பெருமானாலும் பாடல் பெற்ற இந்த கோவில் இறைவனை வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அரவம் தீண்டி இறந்தவரை ஞானசம்பந்த பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்து, இறைவனின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்த தலம், வறுமை போக்கும் தலம், மகாலட்சுமி தாயார் தவமிருந்து மகாவிஷ்ணுவை அடைந்த தலம், சனி கிரகத்தின் உக்கிரம் போக்கும் தலம், பிரம்மதேவர் தவமியற்றிய தலம் என பல ஆன்மிக சிறப்புகளை கொண்ட இக்கோவில் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது. இக்கோவில் இறைவன் மாணிக்க வண்ணர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

5 நிலை ராஜகோபுரம்

வடமொழி பெயராக இறைவனுக்கு ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயர் விளங்குகிறது. அன்னை ஆதிசக்தி வண்டுவார்குழலி என்ற திருப்பெயருடன், தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இந்த கோவில் அன்னைக்கு வடமொழி பெயராக ஆமோதள நாயகி என்ற பெயரும் உள்ளது.

கோச்செங்கோட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ள இக்கோவில் இரு பிரகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழில் சூழ்ந்த திருத்தலமாக உள்ளது. இத்தலம் மருகல் என்ற வாழை நிறைந்திருந்த பகுதி என்பதால், இப்பகுதிக்கு திருமருகல் என பெயர் ஏற்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற மன்னன்

முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளார். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடந்தபோது, சுயம்புவாக தோன்றி இருந்த சிவலிங்க திருமேனியின் மீது மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதை அறிந்த மன்னர் ஓடி வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இறைவன் இருப்பதை அறிந்தார். பின்னர் அந்த இடத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சி காலத்தில், விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் மழையில்லாததால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர். பசிப்பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளை புறந்தள்ளினர். இதனால் மனமுடைந்த மன்னன் குசகேது, மக்களின் பசியை போக்க முடியாமல், மக்களை நீதி நெறியுடன் நடத்த முடியாமல் வாழ்வதை விட இறப்பதே மேல் எனக் கருதி தூக்கிட்டு் தற்கொலைக்கு முயன்றார்.

தன்னலம் கருதாமல், தன் குடிமக்களின் நலனுக்காக தன்உயிரையும் துறக்க துணிந்த மன்னனைத் தடுத்து, சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாணிக்க மழை பெய்ய செய்து மக்களின் வறுமையை போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாம்பு தீண்டியது

வைப்பூரைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு 7 பெண் பிள்ளைகள். ஆண் மகன் இல்லாத அவர், தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளார். மேலும் தன் பெண் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் தமக்கைக்கு அவர் வாக்களித்திருந்தார். காலப்போக்கில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அந்த வணிகர் தனது 7 மகள்களில் 6 மகள்களை செல்வந்தர்களை தேடிப்பிடித்து மணம் செய்து வைத்தார்.

தன் தந்தையின் வாக்குத் தவறிய இச்செயலைக் கண்டு வருந்திய 7-வது பெண், தன் தந்தை தன்னையும் தன் அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் என அறிந்து தன் அத்தை மகனுடன் மதுரைக்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதன்படி அவர்கள் சென்றபோது வழியில் இக்கோவிலின் தெற்குவீதியில் அவர்கள் தங்கி இருந்தபோது பாம்பு தீண்டி மணமகன் உயிரிழந்தார். இதனால் பெரும் துயரம் அடைந்த மணமகள் கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.

திருமணம்

அந்த பெண்ணின் அழுகுரல், அங்கு தங்கியிருந்த ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. அப்பெண்ணை சந்தித்து, அவளது துயரை கேட்ட திருஞானசம்பந்தர், மாணிக்கவண்ணரின் திருவருளை வேண்டி பதிகம் பாடி இறந்து கிடந்த மணமகனை உயிர் பிழைக்க செய்தார்.

பின்னர் இறைவன் திருவருள்படி வண்டுவார்குழலி-மாணிக்கவண்ணர் முன்னிலையில் வன்னி மரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனால் இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.

புராண காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி கங்கை கரையில் வேள்வி மேற்கொள்ள திட்டமிட்டனர். அந்த வேள்வியின் முதன்மையான பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அர்ப்பணிப்பது என்பதில் அவர்களுக்கிடையே பேதம் ஏற்பட்டது. பின்னர் பிரம்மனின் மகனான பிருகு முனிவரை மூன்று உலகங்களுக்கும் அனுப்பி, தங்கள் கேள்விக்கு விடையறிந்து வரச்செய்ய முடிவெடுத்தனர்.

திருமால் மார்பில் உதைத்த முனிவர்

அதன்படி பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார். அங்கு, திருமகளோடும், நித்திய சூரியர்களோடும், விஷ்வக்நேசர் முதலியரோடு வீற்றிருந்த திருமால், பிருகு முனிவரின் வரவை கவனிக்கவில்லை. இதனால் பெரும் கோபமடைந்த பிருகு முனிவர், பள்ளி கொண்ட பெருமாளின் திருமார்பில் உதைத்தார். உடனடியாக பிருகு முனிவரை வரவேற்று உபசரிக்கத் தொடங்கிய திருமால், தன்னை உதைத்த முனிவரின் கால்களுக்கு ஏற்பட்ட வலியை போக்க கருதி பிருகு முனிவரின் கால்களையும் பிடித்து விட்டார்.

தன் இருப்பிடமான பெருமாளின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவருக்குப் பெருமாள் பணிவிடை செய்வதைக் கண்டு கடும் சினம் கொண்ட திருமகள், தான் இருந்த இடத்தை உதைத்தவரை உபசரித்தது நியாயமற்றது எனக் கூறி, தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுண்டத்தை விட்டு விலகி கடும் தவம் செய்ய போவதாகக் கூறி பூலோகம் புறப்பட்டார்.

பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோவிலைக் கண்டார். இத்தலமே தன் தவத்துக்கு ஏற்ற தலம் எனக்கருதி திருமருகல் அடைந்தார். மாணிக்கவண்ணர் கோவிலின் கிழக்குப் பக்கத்தில் குளத்தை ஏற்படுத்திய திருமகள், அக்குளத்தில் தீர்த்தமாடி வில்வங்களைக் கொண்டு மாணிக்கவண்ணரை பூஜித்தார்.

வரலட்சுமி நோன்பு

ஆவணி மாதம் பவுர்ணமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமை நாளில், மாணிக்கவண்ணரின் திருவருளால், திருமால் திருமகளை சந்திக்க திருமருகல் வந்தார். வண்டுவார்குழலியுடன் காட்சியளித்த மாணிக்கவண்ணர், திருமாலையும், திருமகளையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தலத்து ஐதீகம்.

இதன்படி இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தமாதலால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது.

குடமுழுக்கு

மேலும் மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபட்டால் மீண்டும் கூடி வாழ்வது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் மூலவர் சன்னதிக்குச் செல்லும் பாதையில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

இக்கோவிலின் முக்கியப் பெருவிழா, சித்திரை திருவிழா ஆகும். இத்திருவிழாவின் 7-ம் நாளில் செட்டிப்பெண்- செட்டிப்பிள்ளை திருமணமும், மாலையில் மணக்கோலத்துடன் தம்பதியர் பல்லக்கில் வீதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். தற்போது இந்த கோவிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தொடங்கி உள்ளன.

கோவிலுக்கு செல்வது எப்படி?

சென்னையி்ல் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வர வேண்டும். பின்னர் அங்கிருந்து நாகூர் திட்டச்சேரி வழியாக திருமருகலை அடைந்து ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று தாிசனம் செய்யலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

Tags:    

Similar News