கோவில்கள்

அருள் தந்து காக்கும் அன்னை சேலம் கோட்டை மாரியம்மன்

Published On 2023-07-26 07:01 GMT   |   Update On 2023-07-26 07:01 GMT
  • இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.
  • இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது

சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகப்பெரிய விழாவாகும். இவ்விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும்.

இந்த பூச்சாட்டுதலின்போது சேலத்தில் உள்ள மற்ற 7 மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும்.

சேலத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது கோட்டை மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.

இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பக்கவுண்டரின் பாடல்கள் அம்மனின் மகிமையை எடுத்து கூறுகின்றன.

சேலம் கோட்டை பெரியமாரியம்மன் அருளே வடிவாக காட்சியளிக்கிறாள். அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள்.

வலது மேற் கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது.

அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.

ஆரம்பத்தில் இந்த கோவிலின் கருவறை சிறயதாகவும் மிக அழகிய முறையிலும் அமைந்தது. தற்போது அன்னை வீற்றிருக்கும் கருவறை கம்பீரமாய் உருவாகி உள்ளது. விரைவில் இந்த ஆலயம் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. வாழ்வின் அடித்தளத்தில் இருக்கும் தன் பிள்ளைகளை உயர்த்துவதற்காக அன்னை உயரமான கருவறையில் அமர இருக்கிறார். அன்னையின் ஆலயம் வளர வளர சேலம் மாநகர் யாரும் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கருங்கல் கட்டுமானப் பணி

சேலம் என்றாலே உணவுப்பிரியர்களுக்கு மாம்பழமும், கலைப் பிரியர்களுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ்ம், ஆன்மிகப் பிரியர்களுக்கு கோட்டை மாரியம்மன் கோவிலும் நினைவுக்கு வந்து செல்லும். ஆடி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பண்டிகைகள் வேறெங்கும் இல்லாத வகையில் இக்கோயில் களைகட்டும்.

சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலின் கட்டுமானம் பழமை காரணமாக, பழுதடைந்து இருந்தது. பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கும் நோக்குடன் அக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதியதாக கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ராஜகோபுரம் தவிர்த்து, கோவிலின் கருவறை, மகா மண்டபம் உள்ளிட்டவை அடங்கிய பழைய கட்டுமானம் முழுவதும் அகற்றப்பட்டு, 2017-ம் ஆண்டு நவம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் கோவிலில் திருப்பணி தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்து கொண்டே இருந்தது. பழமையான மூலவர் அம்மனின் கருவறையை அகற்றாமல் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அம்மன் கருவறை கருங்கற்களால் கட்டப்பட வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதற்கான தீர்வுகளுடன் மீண்டும் கட்டுமான பணி சுறுசுறுப்படைந்தது. இந்த நிலையில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாவால் 2 வருடங்களாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு கட்டுமானம் நடைபெறாமல் போனது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பின் கடந்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பணியில் கருவறை, மகாமண்டபம், எடுத்துக்காட்டு மண்டபம் ஆகியவை கருங்கல் கட்டுமானமாகவும், சுற்றுப்பிரகார மண்டபம் சிமென்ட் கான்கிரீட் கட்டுமானமாகவும் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன.

கருங்கற்களால் கட்டுவதால், கோவிலின் கட்டுமானம் ஆயிரம் ஆண்டுக்கு மேல் உறுதியாக இருக்கும். மேலும் கருங்கல் கட்டுமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் என்பதால், பணிகள் மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. தற்போது 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துவிட்டன.

தொடர்ந்து, சிமென்ட் கான்கிரீட்டைப் பயன்படுத்தி சுற்றுப் பிரகார மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

கும்பாபிசேகப் பணிகளின் பகுதியாக ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசும் பணிகள் துவங்கியுள்ளது. கோபுரத்தில் வண்ணம் பூசப்படும் பணிகள் முழுமையாக முடிந்த பின் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, விரைவில் கோவில் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து கும்பாபிசேக விழாவில் கலந்துகொண்டு, தங்கள் இஷ்ட தெய்வமான கோட்டை மாரியம்மனை தரிசிக்கும் ஆவலுடன் சேலம் மக்கள் காத்திருக்கின்றனர்.

கோவில் திருப்பணியில் இடம் பிடித்த கற்கள்

கோவில்கள் இந்திய கலை, அறிவு, கலாச்சாரம், ஆன்மீகம், புதுமை மற்றும் கல்வி ஆகியவற்றின் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. கோவில்களின் தத்துவ, ஆன்மீக, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் தனித்துவமான இடத்தை பிடிக்கிறது. இந்திய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக கோவில்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. கோவில் கட்டுமானம் என்பது ஒரு புனிதமான செயலாக மட்டுமில்லாமல், வரலாறு, சமயம், பரிணாமம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவைகளில் நீங்கா இடம் பிடிக்கிறது.

2017-ம் ஆண்டு கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் தவிர்த்து, பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருப்பணிகள் வேலை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சேலம் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திருக்கோவிலில் புதியதாக விமானத்துடன் கூடிய கர்ப்ப கிரகம் மற்றும் அர்த்த மண்டபம் (கருங்கல் பணி) கட்டுதல், கருங்கற்களிலான மகா மண்டபம் கட்டுதல், சுற்றுப்பிரகாரம் மண்டபம் கட்டுதல், எடுத்துக்காட்டு மண்டபம் கட்டுதல் போன்ற திருப்பணிகள்யாவும் தொல்லியல் வல்லுநர்களின் கருத்துரு அறிக்கையின் அடிப்படையிலும் மண்டல, மாநில மற்றும் உயர்நீதிமன்ற குழுவின் ஒப்புதல்களின் அடிப்படையிலும் ஆணையரின் நிர்வாக அனுமதி, தொழில் நுட்ப அனுமதி, மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகாரத்தின்படியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அருகாமையில் அமைந்துள்ள கோவில்கள் வருமாறு:

500 மீட்டர் தூரத்தில் சுகவனேஸ்வரர் கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் கோட்டை அழகிரிநாதர் கோவில், 7 கி.மீட்டர் தொலைவில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில், 5 மீட்டர் தூரத்தில், குமரகுரு சுப்ரமணியசாமி கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்களும் பிரசித்தி பெற்ற கோவில்களாகும்.

ஜொலிக்கும் கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையோரம் கோட்டை மாரியம்மன் கோவில் வீற்றிருக்கிறது. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிகளும் பிரசித்தி பெற்றவை. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு கட்டுமானமும் பார்த்து, பார்த்து மிகவும் கவனமாக நடைபெற்றுள்ளது. கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் பல்வேறு கலை நுணுக்கங்களுடன் அற்புதமாக செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் மைய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவில் பிரமாண்டமாக ெஜாலிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி (சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்) அன்னதான மண்டபத்தில் உள்ளது. பெண்களுக்கு தனியாக 4 குளியலறைகள் வசதி உள்ளது. குறிப்பாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அருகாமையில் ஈரடுக்கு பஸ் நிலையம் உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பஸ்சில் வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கோவிலுக்கு வருகின்றனர்.

இதோ ஒரு தகவல்

தமிழக முதல்-அமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இத்திருக்கோவிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அன்னதான கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 -01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை செலுத்த விரும்புவோர் குறைந்தது ரூ.100 முதல் செலுத்தலாம். நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.3750 என்ற வீதம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் இணையதளத்தில் இ- சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத் தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள், செயல் அலுவலர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில், சேலம் மாநகர் என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். பக்தர்கள் வேறு யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தையொட்டி கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிப்படுவார்கள். இதைதவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், பொங்கலிட்டு, அலகுகுத்தி கோவிலுக்கு பயபக்தியுடன் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசிக்கின்றனர்.

கோட்டை மாரியம்மன் திருத்தல சிறப்பு

சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோவிலையும், ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள்.

இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.

இக்கோட்டையில் அமைந்த இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.

சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்

ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.

ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.

ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.

ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.

புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.

22 நாட்கள் கோலாகல விழா

மாரி வளம் சுரக்க, மக்கள் நலம் பெற்று பசியும் பிணியும் நீங்கி வளமுடன் வாழ ஆடிப்பெருந்திரு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஆடி மாதம் 22 நாட்கள் சிறப்புற கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 18-ந் தேதியை அடிப்படையாக கொண்டே முக்கிய விழாக்கள் நிர்ணயிக்கப்ப டுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு முந்தைய செவ்வாய்க்கி ழமைகளில் முதல் செவ்வாய் பூச்சாட்டுதலும், 2-ம் செவ்வாய் கம்பம் நடுதலும் நடைபெறுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை சக்தி கரகமும், அதைத்தொடந்து பொங்கல் வைத்தல், உருளுதண்டம் விழாக்களும் நடைபெறும். கடைசி செவ்வாய்க்கிழமை மகா அபிசேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. சேலம் மாநகரில் எட்டுப்பேட்டைகளிலும் உள்ள மாரியம்மன் கோயில்களிலும் ஆடிப்பெருந் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

பூப் போட்டு பார்த்தல்

இத்திருக்கோயில் பூப்போட்டு கேட்டல் பிரசித்தமானது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல் தீருமா? மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறுமா? தந்தைக்கு வந்திருக்கும் நோய் தீருமா? மகனுக்கு வேலை கிடைக்குமா? போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வெள்ளை, சிவப்பு நிறங்களில் பூக்களைப் பொட்டலங்களாகக் கட்டி அம்மனின் திருவடியில் வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்த்தால், நினைத்த பூ வந்தால், தாம் எண்ணி வந்த செயல் விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையோடு செல்வர், இதற்குப் பூப்போட்டு பார்த்தல் என்று பெயர். பக்தர்கள் பூப்போட்டு பார்த்து தம் பிரச்சனைகளைத் தீர்த்து செல்வதுண்டு. நோயால் பீடித்தவர்களும், துயர் கொண்டவர்களும் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கிறார்கள்.

வேண்டுதலும், நேர்த்திக்கடனும்

மதம் என்பது நம்பிக்கை, சடங்குகள், ஐதீகங்கள் ஆகிய 3 முக்கிய அம்சங்களைக் கொண்டது. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கை என்கின்றோம். அது ஒன்றின் உண்மையை ஏற்றுக்கொள்வதாகும். நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் சமுதாயத்தின் தேவையின் அடிப்படையில் தோன்றியவையாகும் என்பார்கள் அறிஞர்கள். பக்தர்கள் கோட்டை பெரிய மாரியம்மனை தங்கள் குறைகளைப் போக்கும் மகாசக்தியாக நம்பி வழிபட்டு வருகிறார்கள். அதனால் தான் தாம் மேற்கொள்ளும் முக்கிய செயல்களுக்கு அம்மனின் இசைவு பெற்றே செயல்படுகின்றனர்.

கண்ணடக்கம் சாத்துதல்

கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ கோட்டை பெரிய மாரியம்மனிடம், தமது கண்ணிற்கு ஏற்பட்ட நோயை நீக்குமாறு வேண்டிக்கொள்வர். அதன் காரணமாக நோய் நீங்கி நலமடைவர். தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப மாரியம்மனுக்கு பொன்னாலோ (அ) வெள்ளியாலோ (அ) தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தவார்கள். சில நேரங்களில் திருக்கோயிலுக்கு வந்து மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்துவதும் உண்டு.

கம்பம் நடுதல்

ஒவ்வொரு ஆண்டும் பூச்சாட்டுதலுக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை கம்பம் நடுதல் விழா நடைபெறும். வேப்பமரம், பலா மரம், அரச மரம் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றில் முப்புரி ஆக உள்ள கிளையை வெட்டி எடுத்து நன்கு சீவப்படும். இறைவன் திருஉருவம் எழுதி அழகிய முறையில் ஒப்பனைச் செய்து மங்கல இசையுடன் திருக்கோயிலை மூன்று முறை வலமாக வந்து பலிபீடத்தின் முன்பு அம்மனின் நேர் எதிரே கம்பம் நடப்படும்.

இவ்விழா அம்மனின் திருக்கல்யாணத்தைக் குறிக்கும். அதன் பிறகு திருமணம் கூடிவராத இளம்பெண்கள் காலையில் நீராடி திருக்கோயிலுக்கு வந்து கம்பத்திற்கு நீர் ஊற்றி மங்கல கோலத்துடன் உள்ள அம்மனை வணங்கி திருமணம் நடைபெற அருளுமாறு வேண்டிக்கொள்வர். மேலும், மழை வளம் வேண்டி பக்தர்கள் குறிப்பாக பெண்கள் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி நீர் ஊற்றி மூன்று முறை வலம் வருவர். இதன் நோக்கம், மாரி குளிர்ந்தால் மண் குளிரும் என்பதே. மாரியம்மனை குளிர வைத்து மழை வளம் பெறுவார்கள்.

Tags:    

Similar News