கோவில்கள்
கரூர் மாரியம்மன் கோவில்

கரூருக்கு மழைவளம் தரும் மாரியம்மன் கோவில்

Published On 2022-05-24 01:22 GMT   |   Update On 2022-05-24 01:22 GMT
திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று.
கரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். சக்திவாய்ந்த அம்மன் என்றும் கேட்ட வரம் தரும் மாரியம்மன் என்றும் பக்தர்களால் நம்பிக்கையுடன் வழிபட்டு வரப்படுகிறது.

கரூர் மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்யதிசை பார்வையுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். மேலும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக இக்கோவில் விளங்குகிறது. சுமார்100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் தான்தோன்றி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துவந்து இந்த கோயிலை அமைத்துள்ளனர். கோவிலில் பரம்பரை அறங்காவலராக முத்துக்குமார் உள்ளார். இவரது முன்னோர்கள் இந்த கோயிலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 22 நாட்கள் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து கண்ணடக்கம், பூ மிதித்தல், அக்னிசட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு, உருவார பொம்மை, அலகு குத்துதல், போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனின் அருளை பெறுகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திருவிழா அன்று பந்தல் அமைப்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே முகமது என்ற முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் முன் நின்று நடத்தி வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

 இன்றும் அவை தலைமுறை, தலைமுறையாக தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது தனி சிறப்பு. மேலும் அம்மன் வழிபாட்டில் சில பூஜைகளை ஏற்பாடு செய்வதும் அம்மன் கோவில் மதிய பூஜை தீர்த்தத்தை வாங்கி அம்மை நோய் தாக்கியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் நம்பிக்கையோடு கொடுத்து வழிபடுவதும் கோவிலில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். எனவே மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. கோவில் திருவிழா அன்று கம்பம் ஆற்றில் விடுவது வெகு விமரிசையாக நடைபெறும். கம்பம் விடும் நாளன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உடன் கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபாடு நடைபெறும்.

பின்னர் மாரியம்மனுக்கும் கம்பத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகளுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும். அப்போது கம்பத்திற்கு காவலாக மாவடி ராமசாமி அம்சமாக அரிவாள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு ஆற்றுக்கு அனுப்பும் கம்பத்திற்கு சில வரலாறுகள் உண்டு. மஞ்சள் நீர் கம்பம் என்பது கடவுளை குறிக்கும். கடவுளின் பிரதிபலிப்பே கம்பம் எனப்படுகிறது. சிவசக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாகவே கம்பம் உள்ளது.

ஆணவம், கண்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் விளங்குகிறது. இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். மூன்று பாகங்கள் இணைந்து ஒரே பாகமாக கம்பம் அமைந்திருக்கும். வழிபாடுகளில் உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, ஜோதி வழிபாடு என்று பல வகைகள் உண்டு. அதில் மஞ்சள் நீர் கம்பம் வழிபாடு என்பது அனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள். கரூருக்கு மழை வளம் தரும் தெய்வமாக கரூர் “மாரி”யம்மன் விளங்குகிறாள். ஓவ்வொரு ஆண்டும். கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் சாற்றுதலில் துவங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை அடிக்கடி கண்டிப்பாக மழை பெய்து விடுகிறது.

கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் நிறைந்தது. வெண்டா மண் என்று அழைக்கப்படும் இந்த திருநீற்றை பக்தர்கள் நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், கண் சம்பந்தமான நோய்கள், தோல் நோய் போன்ற நோய்கள் தீர்ந்து விடுகிறது. இத்தகைய ஒரு அரிய வகை மண், தெய்வீக சக்தி கொண்டதும், பல மருத்துவ குணங்கள் அடங்கியும் உள்ளது.

அம்மனுக்கு மாவிளக்குக் காரி என்ற பெயரும் உண்டு. அவள் திருவிளையாடலில் கண் வலி, பிடரி வலி, வயிற்று வலி, தலைவலி என இன்னல் படுவோர் மா விளக்கு எடுத்து நெய் விளக்கேற்றி கோயிலின் முன் தன் நேர்த்திக்கடனை செலுத்தினால் பிணியெல்லாம் பனி போல் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
துன்பம், துயரம், கஷ்டம், இன்னல், இடர் ஏற்படுவதா, ஏற்படுத்திக் கொள்வதா, இதைக் கேள்வியாக முன் வைத்தால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது என்பது தான் சரியாகும். அதற்குத் தீர்வு காண அம்மன் சன்னதி, மனதிற்கு நிம்மதி தரும் அந்த சன்னதிக்கு நாமே நம் மனக்கட்டுப்பாடோடு சில நியதிகளை வகுத்துக் கொண்டு நேர்த்திக் கடன்களாய் செய்வதுதான்;

சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மொட்டை அடித்து தவமிருந்து பெற்ற குழந்தையை கரும்புத் தொட்டிலிட்டு, அக்னியாய் செங்கதிராய் எழும் தீச்சுடர் சட்டியை கரங்களில் ஆற்றிலிருந்து எடுத்து வழிநெடுக ஊற்றப்படும் எண்ணெய் வேகத்திலும் பைய நடை பயின்று ஆலயம் சேர்க்கும் அழகு தனியழகு. உள்ளம் வருத்தி உயிர் மெய் உருக்கி மேனியெல்லாம் அலகு, நாக்கில் அலகு, இடுப்பில் பெரிய அலகு, முதுகுதண்டில் அலகு குத்தி ஏற்ற வண்டியின் மேல் நிறுத்தி பறக்கும் காவடி, பறவைக் காவடி இப்படி எண்ணற்ற காவடிகளை எண்ணமெல்லாம் நிறைந்த தாய்க்கு தன் நேர்த்திக் கடனாய் செலுத்துவதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய கரூர் மாரியம்மன் திருவிழா

திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கரூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் 3 ஆண்டுகளாக இத்திருவிழா தடைபட்டது.

இந்த ஆண்டு வைகாசி திருவிழாவின் முதல் நிகழ்வாக கம்பம் நடும் நிகழ்ச்சி கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. கம்பம் நடுதல் என்பது கோயில் அறங்காவலர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவதாக ஐதீகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 15 நாள்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தம் செலுத்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய கூட்டம் தினந்தோறும் அலைமோதும்.

தொடர்ந்து 13-ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ அலங்காரத்தில் பகுதிவாரியாக மாரியம்மன் ஆலயத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 23ஆம் தேதி திருத்தேர், மாவிலக்கு, அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இறுதி நிகழ்ச்சியாக வரும் மே 25-ந்தேதி புதன்கிழமை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்ட நிகழ்ச்சியாக கரூர் மாரியம்மன் திருவிழா நிறைவுபெறுகிறது. கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி விழாக்குழுவினர் மற்றும் காவல் துறை உள்ளிட்ட இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழாவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரார்த்தனை தலம்

கரூரில் கருணை வடிவாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மாரியம்மன் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறாள். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை வேரறுத்து இன்மையிலும், நன்மையுடன் வாழ வைக்கும் பிரார்த்தனை தலமாக இந்த கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. வழிப் போக்கர், வாசலில் நின்று வணங்கி செல்லும் பக்தர்க ளின் குறைகளை கூட தன தாக்கிக்கொண்டு அவர்கள் வாழ்வின் தடைகளை போக்கி மகிழ்ச்சி பெருக்குடன் வாழ்வை தொடர வைக்கும் தெய்வமாக திகழ்ந்து வருகிறாள்.

அக்னி சட்டியும், அலகு குத்துதலும் நேர்த்திக்கடன்

ஆன்மீகமாக இருந்தாலும், அறிவு சார்ந்த நிகழ்வாக இருந்தாலும் எதையுமே கூலி இல்லாமல் அரிதாக வாங்கி விட முடியாது. அதன் பலனை அனுபவித்ததற்கான கூலியை அளித்தே ஆகவேண்டும். அறிவுசார் நிகழ்வுக்கு அதிக மாகவும், அம்மனுக்கு தன்னால் இயன்றதையும் செய்வது சாலச்சிறந்தது. அந்த வகையில் கண்ணீருடன் மருகி நிற்கும் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும் கரூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றை செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார்கள். இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசே கம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

வீடுகளில் மஞ்சள் நீருடன், தயிர் சாதம் படைத்து வழிபட்ட பக்தர்கள்

கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில், கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க வரவேண்டாம்.

தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து கும்பத்தில் வேப் பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து வழிபாடு செய்து, தயிர் சாதம் படையலுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் மஞ்சள் நீர் வைத்து, கும்பத்தில் வேப்பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து, தயிர் சாதம் படையலுடன் வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் மனதில் ஆறாத வடுவாக இந்த திருவிழா ரத்து இருந்தபோதிலும் நோயற்ற வாழ்வை கரூர் மாரியம்மன் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அம்மனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.

கரூர் மாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்த கே.பி.சுந்தராம்பாள்

மாரி என்றால் மழை என்பது பொருள். மாரியம்மன் என்றால் அருள்மழை பொழியும் தெய்வம் என்பது தெளிவு. எல்லை தெய்வமாய் மக்களை காக்கும் அன்னையாய் கருணையே வடிவான தாயாய், கற்பக விருட்சமாய் மாரி விளங்குவதற்கு ஆண்டு தோறும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே சாட்சி.

எத்தனையோ பேர் வாழ்வில் எத்தனை, எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவை வெளியுலகிற்கு தெரியாததே அதிகம் எனலாம். முக்கிய பிரமுகர்கள் பலரும் அன்னையின் அருள் மழையில் நனைந்து உள்ளனர் என்பதற்கு பலரது மாட்சியும், சாட்சியும் இன்றளவும் ஒளியாய் திகழ்கிறது.

அந்த வகையில் வெள்ளித்திரையில் வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரியான கொடுமுடி கோகிலம் என்ற கே.பி.சுந்தராம்பாள் வெண்கல அக்னி சட்டியேந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பெருமை பெற்றது இந்த கரூர் மாரியம்மன் கோவில்.

இன்னல் நீங்க வேண்டி எத்தனையோ ஆயிரம் பேர் அக்னிசட்டி ஏந்தி வருகிறார்கள். எத்தகையோ பக்தர்கள் 10, 12 அடி நீளமுள்ள அலகு குத்தி வருகிறார்கள். சில பக்தர்கள் பறக்கும் காவடி பாடைக்காவடி, விமான காவடி எடுத்துஅங்கப் பிரதட் சணம் செய்து கொஞ்சும் மழலைவேண்டி வணங்கி, பின்னர்மாரி அருளால் வந்த குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி தூக்கி வருவதே பேரழகு தான்.

சிலர் கரும்புள்ளி, செம் புள்ளி குத்தி குழந்தை வரம் வேண்டுதல், முடிக்காணிக்கை செலுத்துவது, பல்லாயிரம் மாவிளக்கு வைத்தல் என எத்தனை வழிபாடு. அம்மாவாம் கருவூர் மாரிகுழந்தைகளின் உடம்பிலே விளையாட்டாய், விளையாட்டு அம்மையாய் விளையாடும் அழகு தான் எத்தனை. அழகு செதுக்கிய முத்துக்களாய் கோர்த்த மாலையாய் அவர் பார்க்கும் அழகும் வேப்பிலையும், அபிஷேக தீர்த் தமும் வந்த வேகத்தில் வடியும் அழகும் அம்மையின் திருவிளையாடல் அல்லவா! லட்சோப லட்சம் மக்கள் ஆம் பிராவதி எனும் அமராவதி ஆற்றின் கரையில் கூடி வழிபடும் இப்பெருவிழாவை காணாதவர்கள் கண்டு களிக் கவும் அம்மனை தரிசிக்கவும் அழைக்கிறார்கள் அம்மனின் தீவிர பக்தர்கள்.
Tags:    

Similar News