ஆன்மிகம்
கோனார்க் சூரியனார் கோவில்

கலைநயத்தோடு கட்டப்பட்ட கோனார்க் சூரியனார் கோவில்

Published On 2021-01-08 07:57 GMT   |   Update On 2021-01-08 07:57 GMT
ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்த சூரியனார் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மனிதன் முதலில் இயற்கை சக்திகளையே வழிபட்டான் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்படி மனிதர்கள் வழிபட்ட முக்கியமான வழிபாடுதான் ‘சூரிய வழிபாடு.’ இது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சூரியனுக்கு, தமிழகத்திலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் தனிக்கோவில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்த சூரியனார் கோவில் குறிப்பிடத்தக்கது.

பூரிக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த சூரியன் கோவில், கடந்த காலங்களில் பராமரிப்பின்றியும், கடல் அலைகளின் சீற்றத்தாலும் பெருமளவு சிதிலமடைந்துவிட்டது. என்றாலும், மீதம் இருக்கும் ஆலயத்தின் வடிவமைப்பையும், சிற்ப வேலைபாடுகளையும், கலைநயத்தையும் காண கண் இரண்டு போதாது. இந்தக் கோவில், முதலாம் நரசிம்ம தேவன் என்பவரால், 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயம் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டது. அது நமக்கு வியப்பையே மேலிட வைக்கின்றன. ஏனெனில் இந்தக் கோவிலுக்குள், எங்கும் தூண்கள் காணப்படவில்லை. ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இணைத்து கட்டியுள்ளனர்.

ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருளியிருப்பது போன்று இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 7 குதிரைகள் என்பது 7 நாட்களையும், 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக்கோவிலின் கோபுரம் சரியத் தொடங்கியதால் சூரியனாரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பூரியில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு வரும் குழந்தை, இளைஞர், பெரியவர் என்ற மூன்று பருவத்தைச் சேர்ந்தவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில், தனித்தனியாக சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிக குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக ஊடல், கூடல், ஆடல் போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் கண்டுகளிக்க ஆன்மிக சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தக் கோவிலின் அமைப்பு மூன்று பிரிவுகளாக இருந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 4 மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி, மூலவர் சூரியநாதர் சிலை மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாழிகை, நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் வகையில் நம் முன்னோர்களின் அறிவைக் கொண்டு இது சாத்தியமாகி இருக்கிறது. இந்தக் கோவிலின் தனித்தன்மையை உணர்ந்து, இதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது, யுனெஸ்கோ அமைப்பு.

அமைவிடம்

ஒடிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் கோனார்க்கை இணைக்கின்றன. பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனம் மூலமாகவோ கோனார்க் செல்லலாம்.

பூரி ரெயில் நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வர் ரெயில் நிலையத்தில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்திலும் கோனார்க் உள்ளது.

புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் கோனார்க் உள்ளது. சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கட்டா, நாக்பூர் விமான நிலையங்களில் இருந்து புவனேஸ்வருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
Tags:    

Similar News