ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி

ராகு - கேது தோஷம் போக்கும் பரிகாரத் தலங்கள்

Published On 2020-07-20 04:35 GMT   |   Update On 2020-07-20 04:35 GMT
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய பரிகார தலங்கள் உள்ளன. அங்கு சென்று வழிபாடு செய்தால் ராகு கேது தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
*காளஹஸ்தி: சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவும், திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவும் உள்ளன. புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும், அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள்.

*கீழப்பெரும்பள்ளம்: மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து இத்தலத்தை அடையலாம். மூலவர் நாகேஸ்வரர். கேது பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. .   
* திருநாகேஸ்வரம்: கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகேஸ்வரரையும், பிறையணிவாணுதலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கி வாருங்கள்.

*கும்பகோணம்: நகரின் மையத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரையும், பெரியநாயகியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

* பாமணி: மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரையும், அமிர்தநாயகியையும் தரிசியுங்கள். பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்று இத்தலத்தை அழைப்பர்.

*திருப்பாம்புரம்: கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பாம்புரேஸ்வரரையும், வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். ஆதிசேஷன் வழிபட்ட தலம் இது.

*வாஞ்சியம்: கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.

* நாகூர்: நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள இத்தலத்தில் நாகவல்லி சமேத நாகநாதராக இறைவன் அருள்பாலிக்கிறார். நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற தலம் இது.

*பேரையூர்: புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவராக நாகநாதரும், அம்மன் பிரகதாம்பாள் எனும் திருப்பெயரோடும் திகழ்கிறார்கள். நாகராஜன் பூஜித்த தலம் இது.

*நயினார்கோவில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சௌந்தரநாயகி சமேத நாகநாதராக இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார்.

*நாகமுகுந்தன்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

* நாகப்பட்டினம்: காயாரோகணேஸ்வரர் எனும் இத்தல இறைவனை ஆதிசேஷன் பூஜித்து மகிழ்ந்தார். அம்பாளுக்கு நீலாயதாட்சி எனும் திருப்பெயர்.

* சென்னை-குன்றத்தூர்: பூவிருந்தவல்லிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் காமாட்சி அம்மன் சமேதராக நாகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

*சென்னை-கெருகம்பாக்கம்: சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் இத்தலம் உள்ளது. போரூர் சந்திப்பிலிருந்து 3 கி.மீ தொலைவு. நீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர்.

*கோடகநல்லூர்: திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு இறைவன் அருள்பாலிக்கிறார்.
         
*திருக்களாஞ்சேரி: மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக நாகநாதர் அருள்பரப்புகிறார்.

*ஆம்பூர்: வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் இத்தலம் உள்ளது. அபயவல்லி சமேத நாகரத்தின சுவாமி எனும் திருப்பெயர்களோடு இறைவனும், இறைவியும் அருள்பாலிக்கின்றனர். 
Tags:    

Similar News