ஆன்மிகம்
குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
தினம்தோறும் காலையில் நீராடும் போது எந்த மந்திரத்தைச் சொல்லவேண்டும் எவற்றை சொல்லக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
தினம்தோறும் காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு பூஜையை செய்தபின் அந்த நாளுக்குரிய பணிகளை, கடமைகளைச் செய்தோமென்றால், நாள் முழுவதும் தன்னம்பிக்கையும், புத்துணர்வும் தெளிவான மனநிலையும் அமைவது சர்வநிச்சயம்.
திருமுருக கிருபானந்தவாரியார் நீராடுவதற்கு முன்பாக, எப்போதும் குளிக்க இருக்கும் தண்ணீரில், 'ஓம் சரவணபவ' என்று நீரில் எழுதிவிட்டுத்தான் குளிப்பார். ஆடவர் இடுப்பில் அரைஞான் கயிறு அணிவது மிகவும் அவசியம். குளிக்கும்போது இடையில் உள்ளாடை மற்றும் இடுப்பில் துண்டுடன்தான் குளிக்கவேண்டும். அப்படிக் குளிக்கும்போது தனது மனதுக்குப் பிடித்த சுவாமியின் மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்துகொண்டே நாளை தொடங்கலாம்.
எங்கு நாம் குளித்தாலும் நாம் குளிக்கும் நீர், கங்கையென நாம் கருதி குளிக்கவேண்டும். அப்படி நாம் குளிக்கும்போது
'கங்கேச யமுனா சைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதா சிந்து காவிரி
ஜலேஸ்மின் சந்நிதம் குரும்'
என்று நாம் சொல்லி நீராடினோமென்றால், அந்த நீராடல் புனித நீராடல் ஆக மாறிவிடுவதாக ஐதீகம்
குளித்துக்கொண்டிருக்கும்போது, 'சோப்பை எடுதுக்கிட்டுவா சனியனே! இத்தனை நேரம் என்ன பண்றே? போன்ற அமங்கலமான சொற்களைச் சொல்லக் கூடாது. 'உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயம்' என்பதை நினைவில்கொண்டு குளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், குளிக்கும் நேரம் மட்டுமல்ல, அந்த நாளே உங்களுக்கு சுகானுபவமாக இருக்கும்.