ஆன்மிகம்
வீட்டில் வழிபாடு

விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும்?

Published On 2021-06-23 04:02 GMT   |   Update On 2021-06-23 04:02 GMT
விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.
விரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எந்த விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.

சோமவார விரதம்

கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதம் சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிப்பதாகும். காலையில் உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், இரவு மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். தகுந்த வாழ்க்கை துணை வேண்டுபவர்களும், திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த
விரதம்
இருப்பர்.

பிரதோஷம்

தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷவிரதம் சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி இருப்பது.

சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கும் போது, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டிய இந்த விரதத்தின் போது, பகலில் எதையும் சாப்பிடாமல், மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு, சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதினால் கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், ஆகியவை நீங்கும்.

சித்ரா பவுர்ணமி விரதம்

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரகுப்தருக்காக இருப்பது.காலையில் பிதுர் தர்ப்பணம் செய்து விட்டு, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்தலாம் .

தை அமாவாசை விரதம்

சிவபெருமானுக்காக இருக்கப்படும் தை அமாவாசையில், காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதுடன், குடும்பமும் அபிவிருத்தி அடையும்.

கந்தசஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் சேவற்கொடியோன் சுப்பிரமணியருக்காக இருக்கப்படும்
விரதம்
. முதல் 5 நாட்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, மாலை சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

மங்களவார விரதம்

தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் பைரவர் மற்றும் வீரபத்திரருக்காக அனுஷ்டிக்கும் விரதம்.பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு இருக்கும் இந்த விரதத்தால், பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்கும்.

தைப்பூச விரதம்


தை மாத பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்காக இருக்கப்படும் விரதம். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்ககூடிய இந்த விரதத்தால், திருமண யோகம் கூடி வரும்.

கேதார விரதம்

புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள் தான் விரததிற்குரிய நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.

ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொண்டு, கேதாரநாதருக்காக முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் இருந்தால்,தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர் என்பது நம்பிக்கை .

கிருத்திகை விரதம்

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்பிரமணியருக்காக அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.

நவராத்திரி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை மகாசக்தி பார்வதிதேவியை ,முதல் 8 நாள் பழ உணவு சாப்பிட்டு, 9ம் நாளான மகாநவமி அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருந்தால், கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை அடையலாம்.

இந்த விரதங்கள் புண்ணியங்களை பெற்றுத்தருவதுடன் நமது உடல் மற்றும் மனதையும் மேம்படுத்துகிறது.
Tags:    

Similar News