ஆன்மிகம்

வைகாசி மாத பிரதோஷ விரதம்

Published On 2019-05-31 05:44 GMT   |   Update On 2019-05-31 05:44 GMT
வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று விரதம் இருந்து சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
விசேஷங்கள் நிறைந்த வைகாசி மாதத்தில் வருகிற அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுப காரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான வைகாசி மாதத்தில் வருகின்ற இந்த வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானே முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று இறுதியில் சிவனில் கலக்கின்ற பாக்கியமும் பெறுகிறார்கள்.

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகன் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கோவிலில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சித்ரான்னங்களை அன்னதானம் வழங்குவது சிறப்பானதாகும். இம்முறையில் வைகாசி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு பிறருடன் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் நீங்கும். உடல்நல குறைபாடுகள் அறவே நீங்கும். வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படுகின்ற நிலை உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ ஏற்படாது. குடும்பத்தில் நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும்.
Tags:    

Similar News